Offline
மேற்கு வங்கத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்
Published on 06/19/2024 01:39
News

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் பலியாயினர். 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள சீல்டா நோக்கி கஞ்சன்ஜங்கா பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. காலை 9 மணி அளவில் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ரங்கபானி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது.

அப்போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறம் மோதியது. இதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 2 பார்சல் பெட்டிகளும், பொது பெட்டியும் தடம்புரண்டது. மோதிய சரக்கு ரயிலின் இன்ஜின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி ஒன்று விழுந்தது. இந்த விபத்தால் ரயிலில் இருந்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். உடனடியாக போலீசாரும், பயணிகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 15 பயணிகள் பலியானதாக ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Comments