கோலாலம்பூர்:
ஸ்ரீ கெம்பங்கானில் ஒன்பது வயது சிறுமியை கடத்தியதாக வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரவு 11 மணியளவில் நடந்த சம்பவத்தில், சிறுமி தனது தந்தையின் பணியிடத்திற்கு அருகில் பல நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், தனது மகள் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டதை பின்னர் கண்டுபிடித்ததாகவும், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செர்டாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஏஏ அன்பழகன் நேற்றிரவு (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.
புகாரளித்து சிறிது நேரத்திலேயே 35 வயதுடைய ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேக நபர் ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததாகவும், அவரிடம் சரியான பயண ஆவணங்கள் இல்லை என்று சோதனையில் தெரியவந்தது என்றும் அவர் சொன்னார்.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 14(a), குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 363 மற்றும் 292 மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உதவ சந்தேகநபர் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.