லண்டன்:இங்கிலாந்தில் சீன ஆதரவு பெற்ற 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை சீனாவின் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்புவதற்கான பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையே இந்த கல்வி நிறுவனங்கள் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளிலும் செல்வாக்கு செலுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அங்குள்ள கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளில் தலையிடுவது நிரூபணமானது. எனவே அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் நிறுத்துவதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே சமயம் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது