Offline
கமலா ஹாரிஸ் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு
Published on 09/27/2024 02:08
News

வாஷிங்டன்:

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ ப்ரீஸ்ட் டிரைவ் அருகே கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடந்த போது அலுவலகத்திற்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்படவில்லை.போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவது அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments