காஜாங்:
இங்குள்ள பண்டார் பாரு பாங்கி, ஜாலான் B/4, பாங்கி தொழில்துறை எஸ்டேட்டில் 46 நேபாள தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொழிற்சாலை பேருந்து சறுக்கி கவிழ்ந்ததற்கு பிரேக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காஜாங்கிலிருந்து பாங்கி தொழில்துறை எஸ்டேட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது காலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
தொழிலாளர்களை இறக்குவதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றபோது, பிரேக்குகள் வேலை செய்யவில்லை என்பதை ஓட்டுநர் கண்டறிந்ததாகவும், இந்த சூழ்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை சந்திப்புக்கு அருகிலுள்ள வளைவில் சறுக்கி கவிழ்ந்தது” என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் விளைவாக, ஒரு பயணி பலத்த காயமடைந்ததாகவும், செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய பயணிகள் லேசான காயங்களுக்கு ஆளானதாகவும் நாஸ்ரோன் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இங்குள்ள பந்தர் பாரு பாங்கியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்றும் கூறினர்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.