பினாங்கின் வீட்டுவசதி, சுற்றுச்சூழல் குழுத் தலைவர் எஸ். சுந்தரராஜூ, மடானி வீட்டு உரிமையாளர் பிரச்சாரத்தின் கீழ் இந்திய முஸ்லிம்களுக்கான 5% வீட்டுகளுக்கான தள்ளுபடி, மற்ற சமூகங்களின் உரிமைகளை மீறவில்லை என்றும், திறந்த சந்தையில் குறைந்த பங்கேற்பு கொண்ட குழுக்களிடையே வீட்டு உரிமையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி என்றும், இது மற்றவர்களின் இழப்பில் அல்ல என்றும் சுந்தரராஜூ கூறினார்.
இந்த தள்ளுபடி மேம்பாட்டாளர்களின் சமூக கடர்பாட்டு பொறுப்பு என்ற வகையில் வழங்கப்படுகிறது. மேலும் மாநில அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியோ அல்லது மானியமோ இதில் இல்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பூமிபுத்ரா ஒதுக்கீட்டின் கீழ் உள்ள வீடுகள் இந்த தள்ளுபடிக்கு பொருந்தாது என்றும், முதல் முறையாக வாங்குபவர்களுக்கான ஒதுக்கீடுகள் அல்லது சலுகைகள் உட்பட தற்போதுள்ள எந்த வீட்டுக் கொள்கைகளையும் பாதிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பூமிபுத்ரா ஒதுக்கீடு உட்பட தற்போதுள்ள அனைத்து வீட்டுக் கொள்கைகளும் நடைமுறையில் உள்ளன. மேலும் அவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். பினாங்கில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுந்தரராஜூ கூறினார். 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மாநிலம் முழுவதும் விற்கபடாடத 2,796 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வீட்டுவசதித் துறை பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, மே 7 அன்று மாநில நிர்வாகக் குழுவும் செவ்வாயன்று மாநில திட்டமிடல் குழுவும் இந்த தள்ளுபடியை அங்கீகரித்ததாக அவர் கூறினார். கட்டுமானம், தொழிலாளர் செலவுகள் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சொத்துத் துறையை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இது சீரான, நிலையான அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் மாநிலத்தின் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார். வியாழக்கிழமை, சுந்தரராஜூ, தனியார் மேம்பாட்டாளர்கள் முதல் முறையாக வீடு வாங்கும் இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு வருடத்திற்கு 5% தள்ளுபடியை தானாக முன்வந்து வழங்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். இது தொடர்பில் மனித உரிமை வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் இது பாரபட்சமானது என்பதோடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்தார்.