சென்னை,தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு வெளியான தெறி படம் ஹிட் படமாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் சுமார் 1200 கோடி வசூல் செய்தது.
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக அங்கு வருகை தந்த அவருக்கு அணிவகுப்புடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது.
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் மேடையில் அட்லீ பேசியதாவது: “இன்று நான் ஒரு பெரிய இயக்குநராக இருக்கலாம். ஆனால் சினிமாத் துறையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நெருப்பில் நிற்பதை போன்றது. ஆனால் நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த அருண் குமார் நெருப்பு போன்று இருப்பான். நான் இப்போது ஐந்து மணி நேரம் தூங்குகிறேன். அவன் இரண்டு மணி நேரம் தான் தூங்குவான். இளம் வயதில் நாம் என்னவாகப் போகிறோம் என்று எல்லோர் மனதிலும் ஒரு விதை இருக்கும். அது மிகவும் வலுவாக இருக்க வேண்டும்.
பொதுவாக என்னுடைய படங்களை நான் அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்வார்கள். ஆனால் நான் இப்போது ஒரு உண்மையை சொல்லப் போகிறேன். நான் என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களைத்தான் எடுக்கிறேன். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ‘பிகில்’ படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரத்தை ஜேபிஆர் இடமிருந்து தான் எழுதினேன். இந்த டாக்டர் பட்டத்துக்கு நான் எவ்வளவு தகுதியானவன் என்று எனக்கு தெரியவில்லை” இவ்வாறு அட்லீ பேசினார்.