கோலாலம்பூர் :
புத்ரா ஹைட்சில் எரிவாயுக் குழாய் வெடித்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை வரும் திங்கட்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை நிறைவுற்றதாக கூறிய அவர், விசாரணைக் குழுவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் அது வெளியிடப்படத் தயாராகவுள்ளதாகச் சொன்னார்.
“அது நேற்று (வெள்ளிக்கிழமை) தயாராக இருந்தது. ஆனால், பொது விடுமுறை தினமாக இருந்ததால் அதை வெளியிட இயலவில்லை. முறைப்படி முதலில் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தி பின்னர் பொதுவெளியில் வெளியிடுவோம்,” என்றார் அவர்.
இந்தச் சம்பவம் குறித்த தொழில்நுட்ப விசாரணை எதிர்பார்க்கப்பட்டபடி ஜூன் 26ஆம் தேதி நிறைவுபெற்றதாக சிலாங்கூர் முதல்வர் அலுவலகம் முன்னதாக தெரிவித்திருந்தது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஏற்பட்ட தீச்சம்பவத்தால் 81 வீடுகள் முற்றிலுமாகச் சேதமுற்றன.