சென்னை:
தான் எந்தத் தவறும் செய்யவில்லை என போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளதுடன், தனக்குப் பிணை வழங்கக் கோரி, அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். ரத்தப் பரிசோதனையில், ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
இந்நிலையில், கிருஷ்ணாவுக்கும் அவருக்குமான நட்பு குறித்து தெரியவந்ததும், காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதில், கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கிய கிருஷ்ணா, அதை தன் நண்பர்களுக்கும் விநியோகித்துள்ளார். இதையடுத்து, கெவினும் கைதானார்.
இந்நிலையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தனக்குப் பிணை வழங்கக் கோரி, கிருஷ்ணா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தான் போதைப்பொருள் பயன்படுத்தியதில்லை என்றும் உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.