ஆனேக்கல்,கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் 2 பேரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் அவர்கள் ஆனந்தின் அண்ணன் வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் ஆனந்துக்கும், அவரது அண்ணணுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக தம்பதி அங்கிருந்து வெளியேறி கொல்லஹள்ளி பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இதையடுத்து மஞ்சுளா கர்ப்பமானார். அவரை கவனிக்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.
ஆனந்துக்கும் போதிய வருமானம் இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமலும், கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடிய உணவுகள் மற்றும் மருந்துகளை வாங்கி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆஷா ஊழியர்கள், மஞ்சுளாவை கவனித்து உரிய சிகிச்சை அளிப்பதாக கூறினர். ஆனால் மஞ்சுளா அதை நிராகரித்து விட்டார். இந்த நிலையில் மஞ்சுளாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே 3 குழந்தைகளும் உயிரிழந்தன. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.