புதுடெல்லி,சர்வதேச ஜூ-ஜிட்சு வீராங்கனையும் தற்காப்புக் கலை பயிற்சியாளருமான ரோஹினி கலாம் (வயது 35) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். இவர் நேற்று மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் ரோஹினியின் தங்கை ரோஷ்னி கலாம் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்சி அடைந்தார். உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்து ரோஹினியை மீட்ட குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையின் தகவலின்படி, இந்த சம்பவம் நடந்தபோது, ரோஹினியின் தாயார் மற்றொரு மகளுடன் கோவிலுக்கு சென்றிருந்தார். மேலம் அவரது தந்தையும் வீட்டில் இல்லை. அத்துடன் சம்பவ இடத்தில் எந்த கடிதமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும் ரோஹினி தனது வேலை தொடர்பான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது சகோதரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் ரோஹினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.