கோலாலம்பூர்:
பாலஸ்தீனப் பகுதிகளில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘அமைதி வாரியத்திற்கு’ (Board of Peace) ஆதரவு அளிப்பதில் மலேசியா எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.
அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மலேசியா ஆதரித்தாலும், இந்த அமைப்பின் கட்டமைப்பு, நோக்கங்கள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து தீவிர கவலைகள் இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
மேலும் முன்மொழியப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் முழுமையான பட்டியலைப் பெறுமாறு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
“அமைதி என்பது ஒரு நேர்மறையான லட்சியம், குறிப்பாக அது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்த அழுத்தம் கொடுத்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது வரை வன்முறை இன்னும் நின்றபாடில்லை,” என்று பிரதமர் கவலை தெரிவித்தார்.