கோலாலம்பூர்:
மியன்மார் ராணுவ அரசாங்கத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்தலை ஆசியான் (ASEAN) கூட்டமைப்பு அங்கீகரிக்காது என்றும், அந்தத் தேர்தலைக் கண்காணிக்கத் தனது அதிகாரிகள் அல்லது கவனிப்பாளர்களை (Observers) அனுப்பப் போவதில்லை என்றும் மலேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகம்மது ஹசன், இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
மியன்மாரில் 2021-ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆங் சான் சூச்சியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியாக ராணுவ அரசாங்கம் 2025 டிசம்பர் முதல் கட்டம் கட்டமாகத் தேர்தல்களை நடத்தி வருகிறது.
இருப்பினும், இந்தத் தேர்தல் ஒரு “நாடகம்” என்றும், இது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல சர்வதேச நாடுகள் விமர்சித்து வருகின்றன. எதிர்க்கட்சியான என்.எல்.டி (NLD) கலைக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவ ஆதரவு பெற்ற யு.எஸ்.டி.பி (USDP) கட்சி முதற்கட்டத்திலேயே 88% இடங்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“இந்தத் தேர்தலை அங்கீகரிப்பதில்லை என்பது ஆசியான் உறுப்பு நாடுகளின் ஒருமித்த முடிவாகும். தேர்தலைக் கண்காணிக்க வருமாறு மியன்மார் விடுத்த அழைப்பை ஆசியான் நிராகரித்துவிட்டது,” என்று அமைச்சர் முகம்மது ஹசன் தெரிவித்தார்.
மேலும், மியன்மாரில் வன்முறையை நிறுத்தி, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையைத் தொடங்குவதே தற்போதைய முதல் முன்னுரிமை என்றும், அதை விடுத்து நடத்தப்படும் இத்தகைய தேர்தல்கள் மியன்மாரின் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாகாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிவிப்பு, மியன்மார் ராணுவ அரசாங்கத்திற்குச் சர்வதேச அளவில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.