அமெரிக்காவின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தற்போது வீசி வரும் கடுமையான பனிப்புயல் காரணமாக சுமார் 18 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஓக்லஹோமா முதல் நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் 20 அங்குலத்திற்கும் மேல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு மற்றும் சூறாவளி காற்று காரணமாக இன்று ஒரே நாளில் 13,000-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி மூடியிருப்பதால் நூற்றுக்கணக்கான வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவசரத் தேவைகளைத் தவிர மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அரசு அதிகாரிகள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.
சுமார் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸிற்கும் கீழே வெப்பநிலை சென்றுள்ளது. இந்தப் பனிப்புயல் இன்னும் 48 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரசு தன்னார்வலர்கள் மூலம் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.