Offline
Menu
முதல் படத்தின் சம்பளத்தை வைத்து பள்ளிக்கூடம் கட்டும் கும்பமேளா அழகி
By Administrator
Published on 02/15/2026 17:50
Entertainment

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தையே மாற்றினர். நகைக்கடை திறப்பு விழா, கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வந்த மோனலிசா, தற்போது ஆளே மாறி போய் தேவதையாக காட்சி தருகிறார். இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

தற்போது ஒரு இந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் மோனலிசா அளித்துள்ள பேட்டியில், “கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என் சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருக்கிறேன். என் முதல் படத்தின் சம்பளத்தை வைத்து அந்த பள்ளியை கட்டப் போகிறேன். கல்வி மூலம் தான் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்யப்போகிறேன்” என்றார்.

மோனலிசாவின் முடிவு வைரலாகி வரும் நிலையில் திடீரென பணம் கிடைத்ததும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் பள்ளிக்கூடம் கட்ட நினைப்பது பெருமைக்குரிய விஷயம் என்று வாழ்த்தியுள்ளனர்.

Comments