Offline
Menu
நோன்புத் துறப்பு முடிந்த சில நிமிடங்களில் துயரம்: லங்காவியில் பற்றி எரிந்த ஆசிரியர் தங்கும் விடுதி!
By Administrator
Published on 02/21/2026 12:00
News

லங்காவி, 

புனித ரமலான் மாதத்தின் முதல் நாளிலேயே லங்காவியில் ஆசிரியர் குடியிருப்பு ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு நோன்புத் துறப்பு (இப்தார்) முடிந்த சில நிமிடங்களிலேயே, லங்காவி, பாடாங் மட்சிராட்டில் உள்ள துங்கு புத்ரா இடைநிலைப்பள்ளி ஆசிரியர் குடியிருப்பில் இந்தத் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது.

நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் அங்கு தீப்பற்றியது. இந்த விபத்தில் ஆசிரியர் குடியிருப்பின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. குறிப்பாக, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வோக்ஸ்வாகன் போலோ (Volkswagen Polo) ரக கார் ஒன்று சுமார் 90 விழுக்காடு தீக்கிரையாகி முற்றிலும் உருக்குலைந்தது.

தகவல் கிடைத்தவுடன் பாடாங் மட்சிராட் மற்றும் லங்காவி தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு, இரவு 8.17 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்பதை லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மண்டலத் தலைவர் முகமட் ஜம்ரி அப்துல் கனி உறுதிப்படுத்தியுள்ளார்.

நோன்புப் பெருநாளை எதிர்நோக்கியுள்ள வேளையில் நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்திற்கான மூலகாரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து தீயணைப்புத் துறையினர் தீவிர புலனாய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments