மலேசியாவின் சபா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,288 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 935 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு வரை இந்த எண்ணிக்கை 1,564 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பியூஃபோர்ட் (Beaufort) மாவட்டத்தில் வெள்ளத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இங்கு மட்டும் 945 பேர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். சிபிடாங் (Sipitang) மற்றும் மெம்பாகுட் (Membakut) ஆகிய பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை சபா மாநிலத்தின் 6 மாவட்டங்களில் உள்ள சுமார் 140 கிராமங்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளை மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தீவிரப்படுத்தியுள்ளது. புதிதாக வெள்ளம் பாதித்த தெனோம் (Tenom) பகுதியில் மக்களைப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பீத்தாஸ் (Pitas) மற்றும் சூக் (Sook) ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைக்கு மாறாமல் உள்ளது. வானிலை தொடர்ந்து சீரற்றதாக இருப்பதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.