TikTok செயலி வாயிலாக அறிமுகமான 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த திமோர் லெஸ்தே நாட்டைச் சேர்ந்த ஆடவருக்கு, கோத்தா கினபாலு அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தது.
30 வயதான ரஃபினஸ் பாட்டா துக்கான் (Rafinus Bata Tukan) என்ற அந்த ஆடவர், டிக்டாக் மூலம் ஒரு மாத காலம் பழகிய அச்சிறுமியை, கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
மறுநாள், இனாநாம் (Inanam) பகுதியில் உள்ள தனது வாடகை அறையில் வைத்து அச்சிறுமிக்கு அவர் பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளார். காணாமல் போன தனது மகளைத் தேடி தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
நீதிபதி மோனிகா லின்சுவா (Monica Linsua) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், ரஃபினஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(d)-இன் கீழ் அவருக்குக் குறைந்தபட்சத் தண்டனையான 10 ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இந்தச் சிறைத் தண்டனை கணக்கிடப்படும். மேலும், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிநுழைவுத் துறையிடம் (Immigration) ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.