2026-ஆம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் நாளை (மார்ச் 3, செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது. பூமி, சூரியன் மற்றும் நிலவு ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் இந்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது நிலவு முற்றிலும் மறையாமல், பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் சூரிய ஒளியின் காரணமாக அடர் சிவப்பு அல்லது செப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் இது "இரத்த நிலவு" (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.
இந்த முழு சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் கிழக்கு பகுதிகளில் தெளிவாகக் காணப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளில் முழு சந்திர கிரகணத்தின் ஒரு பகுதியைத் தெளிவாகக் காணலாம். சென்னை, மும்பை, டெல்லி போன்ற இதர இந்திய நகரங்களில் நிலவு உதயமாகும் போதே கிரகணம் தொடங்கியிருக்கும் என்பதால், ஆட்டத்தின் இறுதிப் பகுதியை மட்டுமே மக்கள் பார்க்க முடியும். இந்திய நேரப்படி மாலை 6:20 மணி முதல் 6:45 மணி வரை இந்தத் த்ரில்லான காட்சியைக் காண சிறந்த நேரமாகும்.
இந்த அபூர்வ இரத்த நிலவுக்குப் பிறகு, மீண்டும் ஒரு முழு சந்திர கிரகணத்தைக் காண நாம் 2028-ஆம் ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும். சந்திர கிரகணத்தைச் சூரிய கிரகணத்தைப் போல் அல்லாமல் வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானம் மேகமூட்டம் இன்றித் தெளிவாக இருந்தால், இந்த இயற்கை அதிசயத்தை எவ்வித உபகரணங்களும் இன்றி மக்கள் கண்டு ரசிக்கலாம். உங்கள் பகுதியில் நிலவு உதயமாகும் நேரத்தைத் தெரிந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் பாருங்கள்.