மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வியாழக்கிழமை (மார்ச் 19) அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய குண்டுவீச்சைக் கண்டிப்பதில் மலேசியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டைத் தெரிவித்ததாக அன்வர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
அமைதி மற்றும் சிந்தனைக்கான காலமாக இருக்க வேண்டிய ரமலான் மாதத்தில், மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழ்நிலை குறித்து எங்கள் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது என்று அவர் கூறினார். உடனடியாகப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவும், அமைதி, ராஜதந்திரம் மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலைப் பேணுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் தானும் மோடியும் ஒப்புக்கொண்டதாகப் பிரதமர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பிரிக்ஸ் (BRICS) உள்ளிட்ட அனைத்துலக தளங்களில் ஒருமித்த குரலை வலுப்படுத்த மலேசியாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உடன்பட்டதாக அன்வர் கூறினார். சவாலான உலகப் பொருளாதாரச் சூழல் உணவுப் பாதுகாப்பையும் பாதித்து வரும் நிலையில், இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் கூறினார். இறைவன் நாடினால், உலக அமைதிக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மலேசியாவும் இந்தியாவும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.