இந்த சவ்வால் (Syawal) மாதத்தில் முஸ்லிம்கள் தங்களுக்குள் அன்பை வளர்த்துக் கொள்ளவும், உறவுப் பிணைப்புகளை வலுப்படுத்தவும், ஒருவருக்கொருவர் மனமுவந்து மன்னிப்பைப் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும் என்று மலேசியத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமத் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது முகநூல் (Facebook) பதிவில், இந்த நோன்புப்பெருநாள் கொண்டாட்டங்களின் போது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் செலவிடும் தருணங்களைப் போற்றிக் கொண்டாடுமாறு அவர் மக்களை நினைவுபடுத்தினார்.
இந்த சவ்வால் மாதக் கொண்டாட்டங்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆசீர்வாதங்களையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தர வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார்.
“நானும் எனது மனைவியும், குடும்பத்தினரும், துணைப் பிரதமர் அலுவலக ஊழியர்களும் மற்றும் கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் ஊழியர்களும் இணைந்து இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோன்புப்பெருநாள் வேளையில் மலேசியாவில் நிலவும் பல்லின கலாச்சார ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், மற்றவர்களுடன் நல்லுறவைப் பேணுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.