மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, மலேசிய அரசு ஊழியர்களுக்குப் புதிய 'வீட்டிலிருந்தே வேலை' (WFH) கொள்கையை பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தக் கொள்கையின்படி, அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
குறிப்பாக, தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் வசிக்கும் அரசு ஊழியர்கள் இந்தப் புதிய கொள்கையின் கீழ் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசுக்கான மானியச் சுமையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 6.02 ரிங்கிட் ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், சாதாரண மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், ஏப்ரல் மாதம் முழுவதும் டீசலுக்கான மானியமாக 300 ரிங்கிட் ரொக்க உதவியை அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதி அளித்துள்ளது. சுமார் 3,40,000 பேர் இதனால் பயனடைவர். சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இத்தகைய அவசரக் கால நடவடிக்கைகள் அவசியம் எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.