2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணத்தின் போது மலேசிய யாத்ரீகர்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதற்காக, 225 மருத்துவப் பணியாளர்கள் அடுத்த வாரம் மெக்காவிற்குப் புறப்பட உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது இன்று புத்ராஜெயாவில் இந்தப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், சவுதி அரேபிய அரசுடனான மலேசியாவின் வலுவான உறவு காரணமாக ஹஜ் செயல்பாடுகள் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு யாத்ரீகர்கள் நேரடியாகச் சவுதி அரசு மருத்துவமனைகளுக்கே பரிந்துரைக்கப்படுவார்கள் என்பதால், மலேசிய மருத்துவக் குழுவினர் மிகுந்த பொறுமையுடனும் சுறுசுறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தப் பணியாளர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் அடங்குவர். போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொண்டு, நமது நாட்டு யாத்ரீகர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதே இந்த மருத்துவக் குழுவின் முதன்மை நோக்கமாகும். மதானி அரசாங்கத்தின் கீழ் ஹஜ் பயண ஏற்பாடுகள் மிகவும் கவனமாகச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுல்கிப்ளி பெருமிதம் தெரிவித்துள்ளார்.