Offline
Menu
கம்போங் பஹாகியாவில் 1,000 வீடுகள் தீக்கிரை – 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
By Administrator
Published on 04/20/2026 16:00
News

சண்டாக்கானில் உள்ள கம்போங் பஹாகியா (Kampung Bahagia) நீர்க் குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தால் 9,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. அக்கிராமத்தில் இருந்த சுமார் 1,200 வீடுகளில் 1,000 வீடுகள் தீயில் கருகின. இதில் மொத்தம் 9,007 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டப் போலிஸ் தலைவர் ஏசிபி ஜார்ஜ் அப்துல் ரக்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.

நான்கு ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் இந்தத் தீ பரவியது. அதிகாலை 4:00 மணியளவில் இப்பகுதி ‘பேரிடர் மண்டலமாக’ அறிவிக்கப்பட்டது.

கடலில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால், தீயை அணைக்க நீர் ஆதாரம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது என்றும், பின்னர், தண்ணீர் டேங்கர்கள் மற்றும் அருகிலுள்ள தொழிற்சாலையின் நீர் இணைப்புகளைப் பயன்படுத்தி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மதியம் 12:00 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது என்றும் சண்டாக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜிம்மி லகுங் கூறினார்.

சமூக வலைதளங்களில் இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகப் பரவி வரும் தகவல்களைப் போலீஸ் தலைவர் ஜார்ஜ் மறுத்துள்ளார். “இதுவரை உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வரவில்லை. காயமடைந்தவர்கள் தங்களின் உடைமைகளை மீட்க முயன்றபோது லேசான காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கவும் மாவட்டப் பேரிடர் மேலாண்மை குழு, குடிமைத் தற்காப்புப் படை (APM) மற்றும் பிற முகமைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments