Offline
Menu
கோலாலம்பூரில் நள்ளிரவு மேற்கொண்ட போக்குவரத்துச் சோதனையில் 751 சம்மன்கள் விநியோகம் – 5 பேர் கைது!
By Administrator
Published on 04/20/2026 16:00
News

கோலாலம்பூர்:

தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்துச் சோதனையில் (Op Bersepadu), விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 751 சம்மன்கள் விதிக்கப்பட்டன. மேலும், போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JSPT) தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமது ஜம்சுரி முகமது ஈசா தலைமையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 7 மணி வரை இந்தச் சோதனை நடைபெற்றது.

மதுபோதையில் வாகனம் ஓட்டியது: ‘ஓப் மாபுக்’ (Op Mabuk) சோதனையின் கீழ், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் ஜாலான் துன் ரசாக்கில் நடத்தப்பட்ட சோதனையில், வாகனப் பதிவு எண்களை மாற்றியமைத்ததற்காக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் முறையான ஆவணங்கள் இல்லாதது மற்றும் விதிமுறை மீறல்களுக்காக 98 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையின் போது மொத்தம் 1,119 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 80 கார்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில்: 751 சம்மன்கள்- பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக வழங்கப்பட்டன. அத்தோடு சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) 59 நோட்டீஸ்களை வழங்கியது. தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை (AADK) நடத்திய சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்திய 2 பேர் பிடிபட்டனர்.

சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்ட விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய அதிரடிச் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் ஜம்சுரி தெரிவித்தார். குறிப்பாக வார இறுதி நாட்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Comments