வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று மேம்படுத்தப்பட்ட ‘ஹ்வாசோங்-11 ரா’ (Hwasongpho-11 Ra) என்ற புதிய ரக ஏவுகணைகள் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டன. இந்த ஏவுகணைகள் தரைப்பகுதியில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்று அந்நாட்டு ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளன. தனது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் இந்தச் சோதனை அவசியம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் கவனம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழலில் இருக்கும் வேளையில், வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஏவுகணைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் மற்றும் குண்டுகள் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை எனத் தெரியவந்துள்ளது. இந்தத் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் ஆசியப் பிராந்தியத்தில், குறிப்பாக ஜப்பான் மற்றும் தென்கொரியாவிற்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனையைத் தொடர்ந்து தென்கொரிய ராணுவம் தனது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக வடகொரியா செயல்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும், மற்ற நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்துள்ள வடகொரியா, தனது ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கப் போவதாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.