கோலாலம்பூர்:
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவரின் தலையில் காவல்துறை அதிகாரி காலால் மிதித்த சம்பவம் தேவையற்றது மற்றும் அத்துமீறிய அதிகாரப் பயன்பாடு என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தரத்தின்படி, சட்டம் அமலாக்கத்துறையினர் பயன்படுத்தும் எந்தவொரு பலமும் சட்டபூர்வமானதாகவும், அவசியமானதாகவும், சூழலுக்கு ஏற்றவாறு (Proportionate) மட்டுமே இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து அம்னெஸ்டி மலேசியா தெரிவித்துள்ளதாவது: ஒருவரைக் கைது செய்யும்போது கூட, அவருக்குரிய கண்ணியத்தைப் பேண வேண்டும் மற்றும் தேவையற்ற தாக்குதலில் இருந்து அவர் பாதுகாக்கப்பட வேண்டும்.
நியாயமான காரணமின்றி அல்லது தண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறலாகும். இது போன்ற சம்பவங்கள் குறித்துத் தீர விசாரிக்கப்பட்டு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காவல்துறையின் இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்புத் துறையின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் 29 வினாடி வீடியோவில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை இழுத்து கீழே தள்ளிய காவல்துறை அதிகாரி, அவரது தலையில் மிதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சந்தேக நபர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துவிட்டு போக்குவரத்து விதிகளுக்கு மாறாகத் தப்பிக்க முயன்றதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான நபரிடம் இருந்து ‘கெதும்’ (Ketum) நீர் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி, உள்விசாரணை முடியும் வரை நிர்வாகப் பணிகளுக்கு (Administrative duties) மாற்றப்பட்டுள்ளார். காவல்துறையின் நிலையான செயல்பாட்டு முறைகள் (SOP) மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து நேர்மை மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை விசாரணை நடத்தி வருவதாகக் குலிம் துணைப் போலீஸ் தலைவர் டெங்கு முகமது ஃபைசல் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான போலீஸ் நடத்தை ஆணையம் (IPCC) போன்ற அமைப்புகள் இன்னும் வலிமையாக்கப்பட வேண்டும் என்றும் அம்னெஸ்டி மலேசியா வலியுறுத்தியுள்ளது.