Offline
Menu
"அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம்..." - தாயார் மறைவு குறித்து அஜித் மற்றும் அவருடைய சகோதரர்கள்
By Administrator
Published on 06/01/2026 11:00
Entertainment

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார்.

இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து வந்தார். துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டதும் சென்னைக்குக் கிளம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித் மற்றும் அவருடைய சகோதரர்கள் அனுப் மற்றும் அனில் அவர்களுடைய தாயாரின் மறைவு குறித்து பகிந்திருக்கிறார்கள்.

அவர்கள், "எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85-வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர்.

எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை.

அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற இனிய நினைவுகள், அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம் மற்றும் அவரது அன்பாலும் கருணையாலும் அவர் தொட்டுச் சென்ற பலரின் வாழ்வுகள் எங்களுக்கு ஆறுதலாக உள்ளன.

இந்த கடினமான நேரத்தில் தங்களது பிரார்த்தனைகள், இரங்கல் செய்திகள் மற்றும் ஆறுதல் வார்த்தைகள் மூலம் எங்களுடன் நிற்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது.

இந்தப் பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில், எங்கள் குடும்பத்தின் தனியுரிமையையும் மனநிலையையும் மதித்துப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு உடனடியாகப் பதிலளிக்க இயலாத நிலை இருக்கலாம்.

இறுதிச் சடங்குகள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் நடைபெறும். எங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியடையத் தங்களது பிரார்த்தனைகளில் நினைவுகூருமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது அன்பும் அரவணைப்பும் எங்களுடன் என்றும் நிலைத்திருக்கும்." எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

Comments