மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், தேசிய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும் தங்கள் சொந்த மண்ணில் அரங்கேற்றப்படும் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து கூட்டு எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தங்களின் கொடூரமான சதித்திட்டங்களை நிறைவேற்ற, சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றவியல் கும்பல்களை ஈரானிய பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருவதாக இந்நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொலை முயற்சிகள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்ற ஈரானின் இத்தகைய செயல்கள், சர்வதேச விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்று தங்களின் கூட்டறிக்கையில் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
ஈரானிய அதிருப்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் யூத சமூகத்தினரை இலக்காகக் கொண்டு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுப் பிரிவும், அதன் குட்ஸ் படையும் (Quds Force) பின்னணியில் இருந்து இத்தகைய சதித்திட்டங்களை இயக்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈரானுடன் தொடர்புடைய ‘ஹரகாட் அஷாப் அல்-யமின் அல்-இஸ்லாமியா’ (HAYI) என்ற அமைப்பு, பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் யூத சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தீவைப்பு மற்றும் கத்திக்குத்துத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளதை இந்த 22 நாடுகளின் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் மற்றும் உணவகம் மீதான தாக்குதல்களுக்குத் தேஹ்ரான் (ஈரான் அரசு) நேரடியாக உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதரை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றியது. மேலும், கடந்த நவம்பர் மாதத்தில் ஈரானின் புரட்சிகர காவல்படையைப் ‘பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசு அமைப்பு’ என்றும் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 22 நாடுகள் விடுத்துள்ள இந்த மிக முக்கிய கூட்டு எச்சரிக்கை அறிக்கையை சர்வதேச செய்தி நிறுவனமான AFP வெளியிட்டுள்ளது.