மலேசியாவின் திரெங்கானு, செத்தியூ (Setiu) பகுதியில் தனது 15 வயது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் 50 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவரைப் போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஜூன் 15 அன்று மதியம் 3:54 மணியளவில் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செத்தியூ மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் சாஹ்ரில் அஸ்ரி முகமட் சைன் (Zahril Asri Mohd Zain) தெரிவித்துள்ளார்.
கடந்த மே 29 அன்று மதியம் சுமார் 12 மணியளவில், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது, தந்தை அச்சிறுமியைத் தனது படுக்கையறைக்கு அழைத்துள்ளார். அங்கு அவர் அச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததோடு, இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியும் உள்ளார்.
இச்சம்பவத்தால் அச்சிறுமி கடும் மன உளைச்சலுக்கும் (Depression) அதிர்ச்சிக்கும் (Trauma) ஆளாகியுள்ளார். மேலும், அச்சிறுமியிடம் 6 வயது முதலே இந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
செத்தியூ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அந்த நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபரான அந்தத் தந்தையை ஜூன் 27 வரை 7 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செதியூ மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மலேசிய தண்டனைச் சட்டம் பிரிவு 376(3)-ன் கீழ் (நெருங்கிய உறவினருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை) விசாரிக்கப்பட்டு வருகிறது.