கோலாலம்பூர்:
வாகன ஓட்டுநர்களிடையே “பியூ பியூ” (Piu Piu) மற்றும் “மேஜிக் மஷ்ரூம்” (Magic Mushroom) போன்ற ஆபத்தான செயற்கை போதை திரவங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் சாலைத் தடுப்புகளில் உமிழ்நீர் சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தப் போலிஸ் திட்டமிட்டுள்ளது.
மின்-சிகரெட் அல்லது வேப் (vape) கருவிகள் மூலம் நுகரப்படும் இந்த வகை போதைப்பொருட்களால், ஓட்டுநர்கள் தங்களின் சுயநினைவை இழந்து விபத்துகளை ஏற்படுத்துவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இந்த ஆண்டின் ஜூன் 10-ஆம் தேதி வரை 168 போதை திரவ வழக்குகள் பதிவாகி 267 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பள்ளி மாணவர்களிடையேயும் இந்த அச்சுறுத்தல் கண்டறியப்பட்டுள்ளதால், வேப் தயாரிப்புகளுக்கு அரசாங்கம் கடுமையான தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உமிழ்நீர் சோதனை உபகரணங்களை வாங்குவதற்குக் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளதோடு, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகவையுடன் (AADK) இணைந்து மலேசியப் போலிஸ் படை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.