கோலாலம்பூர் டூத்தா-உலு கிளாங் விரைவுச்சாலையில் (DUKE) உள்ள ஜாலான் கூச்சிங் வெளியேறும் வளைவில், இன்று அதிகாலை கார் சறுக்கி, மோதி தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் தீயில் கருகி உயிரிழந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
காலை 5.20 மணிக்கு தங்களது செயல்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஜின்ஜாங் மற்றும் ஸ்ரீ ஹர்தமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் மூன்று பேர் இருந்ததைக் கண்டனர்.
எரிந்து கொண்டிருந்த வாகனத்தில் சிக்கியிருந்த இருவர் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர், அதே நேரத்தில் மூன்றாவது நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் என்று அது கூறியது. விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக அந்தத் துறை தெரிவித்தது.