Offline
Menu
சாலையைக் கடக்க முயன்ற பாகிஸ்தான் பிரஜை மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாப பலி!
By Administrator
Published on 07/15/2026 10:00
News

ன்று காலை மந்தின், ஜாலான் கம்போங் கேபோக் (Jalan Kg Gebok) சாலையில் சாலையைக் கடக்க முயன்ற 43 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு ஆடவர் ஒருவர், மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று அதிகாலை சுமார் 6.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், தலையிலும் உடலிலும் பலத்த காயமடைந்த அந்த வெளிநாட்டு ஆடவர் சிகிச்சைக்காக சிரம்பான், துங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு (HTJS) கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Red Zone) அனுமதிக்கப்பட்டிருந்த அந்த ஆடவர், இன்று காலை சுமார் 10.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் ஜோஹாரி யஹ்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

23 வயதுடைய இளைஞர் ஓட்டி வந்த ‘ஹோண்டா வேவ் 125’ (Honda Wave 125) ரக மோட்டார் சைக்கிளின் முன்பாக அந்தப் பாகிஸ்தான் பிரஜை திடீரென சாலையைக் கடக்க முயன்றுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளோட்டியால் உடனடியாக பிரேக் பிடிக்க முடியாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

உரிமம் இல்லாத ஓட்டுநர்: இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அந்த 23 வயது இளைஞருக்கும் தலையிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. போலீசார் நடத்திய சோதனையில், அந்த இளைஞரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments