Offline
Menu
மாலி: பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலி
By Administrator
Published on 07/16/2026 08:00
News

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மாலி அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ராணுவத்திற்கும் , கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா உள்பட பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ராணுவம் – பயங்கரவாதிகள் மோதல்

இதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி வடக்கு நகரங்களான அக்லிஹல், அனிபிஸ், கொவா, ஹனிரொபா உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதலை பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தினர்.

வடக்கு மாலியை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்கு எதிராக தாக்குதலை கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களையும் ராணுவம் மீட்டு வருகிறது.

ராணுவ வீரர்கள் 30 பேர் பலி

இந்நிலையில், மாலியின் வடக்கு நகரமான அனிபிசை பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகளுடனான இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

Comments