Offline
Menu
பள்ளி மாணவி கொடூரக் கொலை வழக்கு: 3 சிறுவர்கள் உட்பட 11 சாட்சிகளிடம் விசாரணை!
By Administrator
Published on 07/18/2026 11:00
News

ஆகஸ்ட் 3-ல் விசாரணை தொடங்குகிறது

பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் 16 வயது பள்ளி மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 அரசுத் தரப்பு சாட்சிகள் சாட்சியமளிக்க உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14 அன்று, SMK பண்டார் உத்தாமா டாமன்சாரா (4) பள்ளியின் மாணவிகள் கழிவறையில், 4-ஆம் படிவம் (Form Four) பயின்று வந்த யாப் ஷிங் சுவென் என்ற 16 வயது மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இக்குற்றச்சாட்டின் கீழ் அதே பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முன்விசாரணை மேலாண்மை (Pre-trial case management) இன்று உயர் நீதிமன்ற நீதிபதி அட்லின் அப்துல் மஜித் முன்னிலையில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மாணவனின் தற்காப்பு வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் செய்தியாளர்களிடம் பேசுகையில், 11 சாட்சிகளில் 3 பேர் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால், அவர்களின் சாட்சியங்கள் ‘சிறுவர் சாட்சி சான்றளிப்புச் சட்டம் 2007’-இன் கீழ் கையாளப்படும் என்று தெரிவித்தார்.

அச்சிறுவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியமளிக்கத் தயங்கினால், அவர்கள் தனி அறையிலிருந்து ‘லைவ் லிங்க்’ (Live television link) வசதி மூலம் சாட்சியமளிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக, இந்த வசதிகள் கொண்ட செஷன்ஸ் நீதிமன்ற அறை பயன்படுத்தப்படும்.

இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 3 முதல் 6 வரையிலும், ஆகஸ்ட் 10 முதல் 13 வரையிலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவனுக்கு உலு கிந்தா பஹாகியா மருத்துவமனையில் 3 மாதங்கள் நடத்தப்பட்ட மனநலப் பரிசோதனையில், அவர் விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவர் என்பது உறுதியாகியுள்ளது. தற்காப்புத் தரப்பில் அந்த மாணவன் மற்றும் ஒரு மனநல மருத்துவ நிபுணர் உட்பட இருவர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை அறிக்கை, குற்றப் புலனாய்வு அறிக்கை மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட 57 சான்றுகளை (Exhibits) முன்கூட்டியே சமர்ப்பிக்க நீதிபதி அனுமதித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மாணவன் புஞ்சாக் ஆலாம் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து (Puncak Alam Correctional Centre) பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் தன் மீதான தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலைக்குற்றம்)-இன் கீழுள்ள குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.

 

Comments