சிரம்பான்:
16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் இன்று காலை மாநிலம் முழுவதும் உள்ள 8 மையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
தேர்தல் ஆணையம் (EC) விதித்துள்ள விதிமுறைகளின்படி, இன்று காலை 9:00 மணிக்குத் தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் 10:00 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலைத் தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.
வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 14 நாட்களுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரம் உடனடியாகத் தொடங்குகிறது. இது ஜூலை 31-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை நீடிக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் 889,490 பேர்; இதில் சாதாரண வாக்காளர்கள்: 867,151; ராணுவத்தினர் & அவர்களின் துணைகள் 16,884; போலீசார் & அவர்களின் துணைகள் 5,455 ஆகியோர் அடங்குவர்.
வரும் ஆகஸ்ட் 1 பொது வாக்குப்பதிவு நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள மொத்தம் 36 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற அரசியல் கட்சிகள் தங்களின் மூத்த தலைவர்களையும் புதிய முகங்களையும் களமிறக்கியுள்ளன:
இதில் பக்காத்தான் ஹரப்பான் (PH): அனைத்து 36 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேசிய முன்னணி (BN): 25 தொகுதிகளில் மட்டுமே களமிறங்குகிறது. எஞ்சிய 11 தொகுதிகளில் ஒரு தந்திரோபாய உடன்பாட்டின் அடிப்படையில் அது வேட்பாளர்களை நிறுத்தவில்லை.