கிழக்குக் கரை விரைவுச்சாலை (LPT) மீண்டும் ஒருமுறை துயரச் சம்பவத்தின் களமாக மாறியுள்ளது; மோட்டார் சைக்கிள் பாகங்கள் சிதறிக்கிடக்க, உடல்கள் விழுந்த இடங்களிலேயே அசைவற்று கிடந்தன.
கடந்த சனிக்கிழமை பின்னிரவு 1 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்து, சம்பவ இடத்திலேயே மூன்று உயிர்களைப் பறித்தது. நான்காவது மரணம் மருத்துவமனையில் நிகழ்ந்தது, மேலும் 13 பேர் பல்வேறு அளவிலான கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.
இந்த சோகச் செய்தி சமூக ஊடகப் பக்கங்களிலும் நாளிதழ்களிலும் பரவியதைத் தொடர்ந்து, அலட்சியம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது குறித்த விவாதங்கள் பலமாக எழுந்தன.
இணைய ஊடகங்கள், இணைய வெளி நீதிபதிகளாக மாறி இந்த விபத்திற்கு யார் காரணம் என்று விரல் நீட்டி குற்றம் சாட்டுவதில் அவசரம் காட்டின.
பிற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு பொறுப்பற்ற செயலும், சட்டத்தின்படிதான் கையாளப்பட வேண்டும் என்பதில் பெர்கேசோவுக்கு (PERKESO) மாற்றுக்கருத்து இல்லை.
இருப்பினும், இந்த பொது விமர்சனங்களின் சலசலப்புகளுக்குப் பின்னால், மிகக் குறைந்த கவனத்தைப் பெற்ற ஒரு வேதனையான உண்மை மறைந்துள்ளது. இந்த நான்கு மரணங்கள், ஒன்று முதல் 13 வயதுக்குட்பட்ட எட்டு பிள்ளைகளை ஒரே இரவில் தந்தையற்றவர்களாக ஆக்கியுள்ளன.