Offline
Menu
காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் – அமைச்சர் செ.ராஜேஷ் குமார் வரவேற்பு
By Administrator
Published on 07/24/2026 14:00
News

சென்னை,சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான செ.ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்றதும் அனைவருக்கும் கல்வி வழங்க பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறந்தார். பள்ளிகளை திறந்தும் மாணவர்கள் வருகை எதிர்பார்த்தபடி இல்லாதபோது அதற்கான காரணத்தை அறிந்து மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தினால் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது, அனைவருக்கும் இலவச கல்வி கிடைத்தது, கல்வியில் புரட்சி நடைபெற்றது.

அதே திட்டம் பிறகு வந்த அரசுகளால் விரிவுபடுத்தப்பட்டது. காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை த.வெ.க. அரசு விரிவுபடுத்தியது. இந்த திட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்ற பெயரை சூட்டிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் எந்த ஆட்சியால் அடிப்படை வசதிகளை பெற்றார்களோ அந்த ஆட்சியை வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயருக்கு புகழ் சேர்க்கின்ற வகையில் பெயர் சூட்டியதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்றி பெருக்கோடு வரவேற்கிறார்கள், முதல்-அமைச்சரை பாராட்டுகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments