முதியவர் பரிதாபமாக பலி!
இன்று காலை கோலா திரெங்கானு – குவாந்தான் சாலையின் 25.5-ஆவது கிலோமீட்டரில், அலோர் துமான் அருகே கட்டுப்பாட்டை இழந்த BMW ரகக் கார் ஒன்று ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் வேலியை மோதி விபத்துக்குள்ளானதில் 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், காரை ஓட்டிச் சென்ற மஸ்ரி ஹுசின் (Mazri Hussin, 65) என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட மஸ்ரி, கம்போங் பூலாவ் கெரெங்காவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக காரின் கட்டுப்பாடு இழக்கப்பட்டு, அருகில் இருந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் பாதுகாப்பு வேலியைச் சென்று மோதியுள்ளது. இதனால் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து நொறுங்கியதுடன், ஓட்டுநருக்குத் தலையில் படு காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய மாராங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டன் முகமட் சோபியான் ரெட்சுவான், இறந்தவரின் உடல் உடற்கூறாய்வு மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கோலா திரெங்கானு, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (HSNZ) தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.