Offline
Menu
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; மக்கள் கடுமையாக பாதிப்பு
By Administrator
Published on 08/17/2026 15:00
News

ஜகார்த்தா இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் நேற்று அதிகாலை 3.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

இதனை தொடர்ந்து, அதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இதேபோன்று கிழக்கு நுசா தெங்கரா, தெற்கு சுலவேசி மற்றும் மேற்கு நுசா தெங்கரா மாகாணங்களில் சுனாமிக்கான எச்சரிக்கையும் விடப்பட்டது. இதனால், 1.6 முதல் 9.8 அடி வரை அலைகள் மேலே எழும்பும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது. பின்னர் இது திரும்ப பெறப்பட்டது.

5 பேர் பலி

இந்நிலையில், சிக்கா பகுதியில் 2 பேர் மற்றும் மங்காராய் பகுதியில் 3 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக நகரங்கள், கிராமங்களில் கட்டிடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டடைவ இடிந்து விழுந்தன. பொதுமக்களுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், தகவல் பரிமாற்றமும் பாதிக்கப்பட்டது.

இதனால், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளும் பாதிப்படைந்து உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

இந்தோனேசியாவில் நிலநடுக்க பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதன்படி, நேற்றிரவு 10 மணியளவில் தோமினி வளைகுடா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. இது 68 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதற்கு முன்பு நேற்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. எனினும், நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலர் காயமடைந்து உள்ளனர்.

Comments