Offline
Menu
ஜகார்த்தாவை விட 3 மடங்கு பெரிய நிலப்பரப்பு தீக்கிரை: சரவாக்கில் அதிகரிக்கும் எல்லை தாண்டிய புகைமூட்டம்!
By Administrator
Published on 08/24/2026 16:00
News

போர்னியோ தீவுப் பகுதியில் பரவி வரும் பயங்கரக் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்தோனேசிய அரசாங்கம் மேலும் 1,500 ராணுவ வீரர்களை உடனடியாகக் களமிறக்கியுள்ளது.

இந்தோனேசிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. இது இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் மொத்த பரப்பளவை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்னியோவில் நிலவும் காட்டுத் தீ தடுப்புச் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, தீயணைப்புப் பணிகளை விரைவுபடுத்த கூடுதல் ராணுவப் படைகளை அனுப்ப உத்தரவிட்டார்.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும், வான்வழியாக நீர தெளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் 6 சிறப்பு ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

தீவிரமடைந்து வரும் வறட்சியான வானிலை மற்றும் ‘எல் நினோ’ (El Nino) தாக்கத்தின் காரணமாகக் காட்டுத் தீயின் வீரியம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமந்தான் காட்டுத் தீயினால் உருவாகியுள்ள அடர்ந்த எல்லை தாண்டிய புகைமூட்டம், எல்லை கடந்து மலேசியாவின் போர்னியோ பகுதியான சரவாக்கிற்குள் பரவியுள்ளது. இதனால் சரவாக்கின் முக்கிய பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (API) தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்து வருகிறது.

புகைமூட்டத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது தவறாமல் முகக்கவசம் அணியுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments