மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலைகளில், வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் 350 மின்சார வாகன (EV) சார்ஜிங் மையங்கள் நிறுவப்படும் என்று ‘பிளஸ் மலேசியா பெர்ஹாட்’ நிறுவனத்தின் போக்குவரத்து மேம்பாட்டுத் தலைவர் டத்தோ நிக் ஐரினா நிக் ஜப்பார் தெரிவித்துள்ளார்.
குறைந்த கார்பன் உமிழ்வு இயக்கத் திட்டத்தின்கீழ், மலேசிய அரசு மற்றும் JomCharge, Gentari Go, ChargeEV ஆகிய தனியார் நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, மின்சார வாகனப் பயன்பாட்டாளர்களின் எதிர்காலத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் முதற்கட்டமாக, நடப்பாண்டிலேயே 47 முதல் 200 கிலோவாட் (kW) திறன் கொண்ட அதிவேகக் ‘டைனமிக்’ சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் சார்ஜிங் மையங்களில் ஏற்படும் காத்திருப்பு நேரத்தைத் தவிர்க்க, முக்கியப் பகுதிகளில் 20 முதல் 30 கூடுதல் சார்ஜிங் புள்ளிகளை அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.