சுங்கை பட்டாணி நீதிமன்ற வளாகத்திற்கு அருகே நேற்று மாலை 4.30 மணியளவில், நிறுவனத்திற்குச் சொந்தமான 30,000 ரிங்கிட் பணத்தைக் காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல் கத்திமுனையில் வழிப்பறி செய்து தப்பியோடியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞர் இன்று காலை 7.00 மணியளவில் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாக கோலா முடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி ஹான்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.
“காரில் வந்த சந்தேக நபர்களில் ஒருவன் மடிக்கும் கத்தியைக் காட்டித் தன்னைத் தாக்க முயன்றபோது, தான் அவனை எதிர்த்துத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். இருப்பினும், காரில் இருந்த மற்ற சந்தேக நபர்கள் கூட்டுச் சேர்ந்து தன்னைத் தாக்கிவிட்டு, காரிலிருந்த நிறுவனப் பணம் மற்றும் வங்கி அட்டைகளுடன் தப்பியோடிவிட்டதாக” அவர் தெரிவித்தார்.
இந்த வழிப்பறிச் சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, காவல் துறை உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 (கூட்டு வழிப்பறி), பிரிவு 397 (ஆயுதங்களுடன் வழிப்பறி செய்தல்) மற்றும் பிரிவு 182 (பொய்யான தகவல் அளித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறும் பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தைக் நேரில் கண்ட சாட்சிகள் அல்லது தகவலறிந்த பொதுமக்கள் உடனடியாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.