Offline
Menu
துவாஸ் சோதனைச் சாவடியில் 10 கிலோ கஞ்சாவுடன் இரு மலேசியர்கள் கைது!
By Administrator
Published on 09/20/2026 15:00
News

சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச் சாவடியில், மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்து வைத்து 203,000 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய 10 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவை நாட்டிற்குள் கடத்த முயன்ற இரு மலேசியர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி மலேசியப் பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 36 வயது ஆணும் 35 வயது பெண்ணும் வழக்கமான சோதனையின் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

 

மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியிலும், ஹேண்டில்பாரில் தொங்கவிடப்பட்டிருந்த பையிலும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் அடங்கிய மொத்தம் 10 பொட்டலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 

“மத்திய நச்சுப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் (CNB) ஒப்படைக்கப்பட்ட இந்தச் சோதனையில், மொத்தம் 10,164 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வாரத்திற்கு சுமார் 1,450 போதைப்பொருள் பயன்பாட்டாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவாகும்.” என்று ICA தெரிவித்துள்ளது.

 

சிங்கப்பூரின் 1973-ஆம் ஆண்டு போதைப் பொருள் துஷ்பிரயோகச் சட்டத்தின் பிரிவு 7-இன் கீழ், 500 கிராமுக்கு மேல் கஞ்சாவைக் கடத்துபவர்களுக்குச் சட்டப்படி கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதால், கைது செய்யப்பட்ட இரு மலேசியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments