ஈப்போ -லுமுட் நெடுஞ்சாலை அருகில் உள்ள தாமான் சிலிபின் ரியா பகுதியில், நேற்று ஆடவர் ஒருவர் TNB (Tenaga Nasional Berhad) நிறுவனத்தின் கேபிளை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 6.07 மணிக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அமாட் (Abang Zainal Abidin Abang Ahmad) தெரிவித்தார்.
இருவர் TNB கேபிளை வெட்டித் திருட முயற்சிக்கும் போது மின்சாரம் பாய்ந்து கேபிள் திடீரென வெடித்ததில் அவ்விருவரில் ஒருவர் சம்பவ இடத்தில் இறந்ததாகவும் மற்றொருவர் தப்பிச்சென்றதாகவும் நேரில் பார்த்தவர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், சிறப்பு புலன்விசாரணை அதிகாரி சார்ஜன்ட் லியானா ஸுலைக்கா இப்ராஹிமை (Sarjan Liyana Zulaikah Ibrahim) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.