2025ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வி சான்றிதழ் (SPM) தேர்வு கீழே குறிப்பிடப்பட்ட தேதிகளில் நடைபெறும் என மலேசிய கல்வி அமைச்சகம் (KPM) அறிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை:
3 – 6 நவம்பர் 2025: மலாய் மொழி வாய் மொழி தேர்வு
10 – 13 நவம்பர் 2025: ஆங்கில மொழி வாய் மொழி தேர்வு
17 – 19 நவம்பர் 2025: அறிவியல் நடைமுறை (அமாலி) தேர்வு
20 நவம்பர் 2025: மலாய் மொழி, ஆங்கிலம் கேட்கும் தேர்வுகள்
25 நவம்பர் – 23 டிசம்பர் 2025: எழுத்துத் தேர்வுகள்
மொத்தம் 4,13,372 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள 3,350 தேர்வு மையங்களில் இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். மேலும், 1,27,526 தேர்வு பணியாளர்கள் தேர்வுகள் தடையின்றி நடைபெறுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சகம் அனைத்து மாணவர்களையும் தங்களின் தேர்வு நேர அட்டவணையை கவனமாகப் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதில் தேர்வின் தேதி, நேரம், தாள் குறியீடு, பாடத்தின் பெயர் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். SPM 2025 தேர்வு அட்டவணை அதிகாரப்பூர்வமாக Lembaga Peperiksaan (LP) இணையதளமான lp.moe.gov.my வழியாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வர்கள் தங்கள் அடையாள ஆவணம் மற்றும் தேர்வு பதிவு அறிக்கை (Pernyataan Pendaftaran Peperiksaan) ஆகியவற்றை கட்டாயம் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும், செயல்முறை விதிமுறைகள் (SOP) மற்றும் தேர்வு ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சகம், மாணவர்கள், பணியாளர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, இன்ஃப்ளூயன்சா போன்ற தொற்றுநோய்கள் (ILI) அல்லது இயற்கை பேரிடர்கள் போன்ற சவால்களுக்கு முன் தயாராக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக பிற அரசு நிறுவனங்களுடனும் ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
பேரிடர் அல்லது அவசர நிலைமைகள் காரணமாக பாதிக்கப்படும் மாணவர்கள் உடனடியாக தங்கள் பள்ளி அல்லது மாநில கல்வித் துறை (JPN)-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவர்கள் Lembaga Peperiksaan மற்றும் JPN இயக்க அறை (bilik gerakan) தொடர்புகொள்ளலாம்.
கல்வி அமைச்சகம் 2025 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வுகள் சீராகவும் தடையின்றியும் நடைபெறுவதற்காக முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.