கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி சபாவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, அங்கு நிலநடுக்கச் செயல்பாடுகள் தற்போது குறைந்த மட்டத்திலேயே இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அம்புன் டிண்டாங் கூறுகையில், பிப்ரவரி நிலநடுக்கத்திற்குப் பிறகு இதுவரை எந்தவொரு நில அதிர்வுகளும் (Aftershocks) பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும், அந்தப் பகுதியில் நில அதிர்வுகளைக் கண்டறியும் கண்காணிப்புப் பணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வரலாற்றுத் தரவுகளின்படி, சபாவில் ரானாவ் (Ranau) மற்றும் லாஹாட் டத்து (Lahad Datu) ஆகிய மாவட்டங்கள் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகளாகக் கருதப்படுகின்றன.
கடலுக்கு அடியில் 100 கி.மீ-க்கும் குறைவான ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிற்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் மட்டுமே சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது. பிப்ரவரி 23 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிக ஆழமான பகுதியில் நிகழ்ந்ததால் சுனாமி ஆபத்து ஏற்படவில்லை.
தற்போது சபா முழுவதும் 28 நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை சர்வதேச நில அதிர்வு அமைப்புகளுடன் இணைந்து தகவல்களை உடனுக்குடன் வழங்கி வருகின்றன.
13-வது மலேசியத் திட்டத்தின் (13th Malaysia Plan) கீழ், நில அதிர்வு உணர்விகளின் (Sensors) எண்ணிக்கையை அதிகரிக்கவும், கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் மெட் மலேசியா திட்டமிட்டுள்ளது. நிலநடுக்கங்களை முன்னரே கணிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ தகவல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.