மலேசியாவின் மொத்த மக்கள் தொகை நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 34.4 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், மக்கள் தொகை வளர்ச்சியின் வேகம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.5 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாகப் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைமைப் புள்ளியியல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் இன்று வெளியிட்ட அறிக்கையில், மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 18 மில்லியன் பேராகவும், பெண்கள் 16.3 மில்லியன் பேராகவும் உள்ளனர்.
அதேநேரம் முதியோர்களின் எண்ணிக்கை (65 வயதுக்கு மேற்பட்டோர்) 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், சிறுவர்களின் (14 வயதுக்குட்பட்டோர்) எண்ணிக்கை 21.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மலாய்க்காரர்கள் 58.3 சதவீதத்துடன் பெரும்பான்மையாக உள்ளனர். சீனர்களின் பங்களிப்பு 22.1 சதவீதமாகச் சற்றே சரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், பிறப்பு விகிதம் 3.1 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், இறப்பு விகிதமும் 1.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. மாநில அளவில், சிலாங்கூர் மாநிலமே அதிகப்படியான பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நாட்டின் எதிர்காலச் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.