ஜொகூரில் உள்ள மாரா அறிவியல் ஜூனியர் கல்லூரியில் (MRSM), ஜூனியர் மாணவர் ஒருவரைத் தாக்கி கொடுமைப்படுத்திய (Bullying) குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 6 சீனியர் மாணவர்கள், கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர். இத்தகைய ஒழுங்கீனச் செயல்களுக்குத் தங்கள் கல்வி நிறுவனத்தில் சற்றும் இடமில்லை என மாரா (Mara) நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது குறித்து மாரா அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரப் வாஜ்டி டுசுகி கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாகக் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை உடனடியாகக் கூட்டி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நேற்று முதல் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ள அந்த 6 மாணவர்களின் மீதான குற்றம் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகப் பள்ளியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
“காரணம் எதுவாக இருந்தாலும், ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம் என்ற பெயரில் ஜூனியர் மாணவர்களைத் தாக்குவதையோ அல்லது சட்டத்தைக் கையில் எடுப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. நான் பலமுறை கூறியுள்ளேன், ‘கை வைத்தால்… வெளியே போக வேண்டியதுதான்’ (You touch, you go). வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு MRSM கல்லூரிகளில் இடமில்லை” என்று அவர் தனது முகநூல் வீடியோவில் எச்சரித்துள்ளார். மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவர்கள் பயப்படாமல் புகார் அளிக்க வேண்டும் என்றும், இதை மூடிமறைக்க முயலும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட 14 வயது மாணவனின் தாய் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவே இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தனது மகன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் விடுதியை விட்டு வெளியேற விரும்புவதாகக் கூறியதாகவும், பின்னர் அனைத்து நடைமுறைகளும் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகே, சீனியர் மாணவர்கள் தன்னை நெஞ்சில் குத்தியும், முழங்கையால் தாக்கியும் கொடூரமாக வதைத்த உண்மையை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டதாக அந்தத் தாய் பதிவிட்டிருந்தார்.