மலேசியா மற்றும் நமது அண்டை நாடுகளுக்கு மிக முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையாக விளங்கும் 'மலாக்கா நீரிணை' (Strait of Malacca) மற்றும் சிங்கப்பூர் நீரிணையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியத் தலைவர்கள் மிக முக்கியமான ஒரு மூலோபாய உடன்பாட்டை எட்டியுள்ளனர். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) ஆகிய இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் வருடாந்திர சந்திப்பில் இதற்கான பிரகடனத்தை வெளியிட்டனர்.
மலாக்கா நீரிணையை ஒட்டியுள்ள நாடுகள் என்ற முறையில், ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட விதிகளின்படி (UNCLOS), சர்வதேச கப்பல் போக்குவரத்து எந்தவித தடங்கலுமின்றி எப்போதும் சுதந்திரமாகவும், திறந்த நிலையிலும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் இப்பகுதியில், தற்போதைய உலகளாவிய கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த அண்டை நாட்டுத் தலைவர்களின் "ஸ்ட்ராட்டஜிக் அலைன்மென்ட்" (Strategic Alignment) பாதுகாப்பு உடன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.